பிறக்கும் போதே கைகள் இல்லாமல் பிறந்த அமெரிக்கப் பெண் கால்களால் விமானத்தை இயக்கி உலக சாதனை படைத்து பைலட்டுக்கான உரிமமும் பெற்றுள்ளார்.அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெசிகா காக்ஸ் (32). இவர் பிறவியிலேயே கைகள் இல்லாமல் பிறந்தார். கை மட்டுமே ஊனமான நிலையில், மனதில் தன்னம்பிக்கையோடு படித்து முடித்துள்ளார். கைகள் இல்லாமல் இருந்தாலும் மனதில் தன்னம்பிக்கை இருந்ததால், கால்களையோ கையாக மாற்றிக் கொண்டு, காலால் எழுதுவது, கணினியை இயக்குவது, தலையை சீவிக் கொள்வது வரை எல்லாமே செய்ய பழகிக் கொண்டுள்ளார்.
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள டேக் வான் டோ என்ற தற்காப்புக் கலை பயின்று 2 கறுப்பு பட்டைகளையும் பெற்றவர். நீச்சலிலும் முன்னணியில் திகழ்கிறார். கால்களால் கார் ஓட்டவும் பழகிக் கொண்டார்.இந்த நிலையில்தான் அவருக்கு விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசை பிறந்தது. உடனடியாக அவர் டக்சன் நகரில் உள்ள விமான பயிற்சி மையத்திற்குச் சென்று தனது விருப்பத்தைக் கூறினார். கை இல்லாத பெண்ணால் எவ்வாறு விமானம் ஓட்ட முடியும் என்று வியந்த பயிற்சி நிறுவனம், அவர் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்தார் என்பதை அறிந்ததும் உடனடியாக அவருக்கு பயிற்சி அளிக்க முன் வந்தது.ஆனால் தற்போது இருக்கும் விமானங்கள் கால்களால் இயக்க வசதி இல்லாமல் இருந்ததால், 1945ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குட்டி விமானத்தை ஜெசிகாவின் பயிற்சிக்கு பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பழைய குட்டி விமானம் புதுப்பிக்கப்பட்டு ஜெசிகாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி முடிந்து கடந்த வாரம்தான் அவருக்கு பைலட் உரிமம் வழங்கப்பட்டது.தற்போது ஆகாசத்தில் பறந்து கொண்டிருக்கிறார் ஜெசிகா காக்ஸ். மனம் இருந்தால் மார்கம் உண்டு என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக் காட்டாக வாழ விரும்பும் ஜெசிகாவிற்கு நாமும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
0 கருத்துகள் :
கருத்துரையிடுக